Monday, November 10, 2008

நாளைய உலகம்



எதிர்கால தலைமுறையினருக்கு வாழ்க்கை கடிணமானதாகவே இருக்கும் என்று எனக்கு படுகிறது. வாழ்கையின் வேகம் அதிகமாகிவிட்டிருக்கிறது. எங்கும் எதிலும் வேகம்...வேகம்... கணினி வேகமாயிருக்க வேண்டும். வாகனம் வேகமாயிருக்க வேண்டும். வருமாணம் வேகமாயிருக்க வேண்டும்... கற்றல் வேகமாயிருக்கவேண்டும்..இன்றைய நாட்கள் இப்படி வேகம்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கையில் நாளைய தலைமுறையினரின் காலங்கள் கடிணமானதாகவே இருக்கும் என்பது என் எண்ணம்.

தேவைக்கு அதிகமாக தேடல் தொடங்கிய மனிதன் வாழ்க்கை வாழ்தலின் முழு அர்த்தத்தினை விளங்கிகொள்ளவில்லை என்றே எனக்கு படுகிறது...தன்னுடைய தேவைக்காக மரங்களை வெட்டிய மனிதன் இன்று மழைக்கு அழுகிறான். சுயநலத்துக்காக மலைகளை தகர்த்த மனிதன் இன்று பூகம்பத்திற்கு அழுகிறான். இயற்கைக்கு மாறாக மனிதன் செய்த எந்தவொரு செயலும் இன்று மனிதனை கோர நகம்கொண்டு உச்சந்தலையில் கைவைத்து அழுத்துகிறது.
  • விஞ்ஞானம் எதைதந்தது மனிதனுக்கு?
    வரவேற்பறைக்கு வந்த தொலைக்காட்சியும் கணினியும் கண்குறைபாடை கொடுத்தது. கபடி விளையாடி உடல்வளர்த்த பிள்ளைகள் இன்று கணினி விளையாட்டிலேயே களைத்துபோய்விடுகின்றனர். தொலைக்காட்சி தொடரில் வந்த சண்டைகள் வீட்டுக்குளேயே தொடர்கிறது.
  • விரைந்து செல்லும் வாகனம் சுவாசத்தை கெடுத்தது.. உடலுக்கு கொழுப்பை தந்தது.கால் கிலோமீட்டர் நடக்கமுடியாமல் கால் டாக்ஸி தேட சொன்னது..
  • உள்ளங்கையில் உலகம் என்று வந்தது கைபேசி. மனிதன் உலகை அறிந்துகொண்டான். உள்ளங்களை அறிய மறந்தான். பக்கத்து வீட்டு பாட்டியின் பெயர் தெரியாதவன் பாபிலோனில் உள்ள பேபியின் பெயர் சொல்லுவான். தங்கையின் திருமணத்திற்கு செல்ல நேரமில்லாதவன் கனவு மங்கையின் கல்யாணத்திற்கு மலர் அனுப்புவான் இணையத்தின் மூலமாக.
  • பாஸ்ட் பூட், பாஸ்ட் டிராக் என்று உலக அவசரம் அசுரமாகிவிட்டிருக்கிறது. வாழ்கையை வாழ மறந்த மனிதன் இயற்கையை இயலாமையால் திட்டிகொண்டிருக்கிறான்.
  • கற்கால மனிதன் இன்றைய நாகரீக கால மனிதனை போல பொறாமை கொண்டிருக்கவில்லை. இத்தகைய கொலைவெறி அன்றில்லை. சேமிப்பு, உதவிகள் செய்துகொள்ளமையால் பிறந்தது. தனக்கென சேமிக்க தொடங்கிய மனிதன் தன்னை மட்டுமே தன் குடும்பத்தை மட்டுமே கணக்கில் கொண்டான். தனக்கு கிடைக்கும் ஒரு ரூபாய்க்காக மற்றவரின் இழப்பை நியாப்படுத்தினான்.

நாளைய உலகம் கவர்ச்சியால், பொறாமையால், இயலாமையால், விபச்சாரத்தினால், வட்டியினால், காழ்புனற்சியினால், பொய்யினால், துரோகத்தினால், சந்தேகத்தினால், நம்பிக்கையின்மையால் ஆளப்படும் என்றே எனக்கு படுகிறது..