Saturday, January 28, 2012

சட்டை - நினைவுகள்


வளைகுடா வந்தப்பிறகு முதல் தாயக பயணம். விடுமுறையோடு திருமணமும் நிகழ்வதால் களைகட்டியது 'பர்சேசிங்'. திருமணதிற்கென்று ப்ரித்யோகமான உடைகளை வாங்கிக்கொண்டிருந்தோம் நானும் நண்பர்களும். பிளாட்பாரத்தில் சட்டை 5 ரியாலென ஒருவர் கிட்டத்தட்ட நூறு சட்டைகளை போட்டுக்கொண்டு விற்றுக்கொண்டிருந்தார். இரண்டு சட்டை வாங்கும்படி நண்பர் பரிந்துரைத்தார். கொடுக்கும் விலையை பொறுத்தே பொருளின் தரம் இருக்கும் என்பது என் எண்ணம். வேண்டாமென சொன்னேன். " யாராவது இல்லாதவங்களுக்கு கொடுக்கலாம், இரண்டு வாங்கிக்கொள்" என நண்பர் வற்புறுத்தினார். "கொடுப்பதை தரமானதாக கொடுக்கவேண்டும் இல்லாவிடில் கொடுக்காதிருப்பதே சிறந்தது" என மறுத்துரைத்தேன். "பத்து ரியால் கொடுக்க இவ்வளவு பேச்சு ஆவாதுடா மகனே" என நண்பர் இரண்டு சட்டைகளை கொண்டுவந்துவிட்டார்.

ஊருக்கு சென்ற பிறகு இவரிவருக்கு இதிதுவென கொடுத்தபின், இந்த இரண்டு சட்டைகளை யாருக்கும் கொடுக்கவில்லை. சொந்தத்திலொருவர் வீட்டுக்கு வந்திருக்கையில் அவருடையதை கொடுக்கும்போது இந்த சட்டையை கண்டு அதிலிருந்து ஒன்றை எடுத்துக்கொண்டார். நான் வேண்டாமென மறுத்தும் "நல்லாதாண்டா இருக்கு" என்று எடுத்துக்கொண்டார். மீதமொரு சட்டை என் அலமாரியிலேயே இருந்தது.

திருமணம் முடிந்து துணைவி வீடு வந்த பின் பிரிக்கப்படாத அந்த சட்டையை பார்த்து "யாருதுங்க இது, நல்ல சட்டையா இருக்கு " எனக்கேட்டார். அஞ்சு ரியால் சட்டை என பகடி செய்து பதில் சொன்னேன்.

ஒரு நாள் அந்த சட்டையை அணியும்படி மிகவும் வற்புறுத்தினார். நல்லாத்தான் இருக்கு என சான்றிதழ் வேறு. அரைமனதோடு அணிந்துசென்றேன். அருமையான மெல்லிய காட்டன் சட்டை அது. அணிவதற்கு சுகமாகவும் கச்சிதமாகவும் இருந்ததில் எனக்கு வியப்பிலும் வியப்பு. விருப்ப உடைகளில் ஒன்றாக அந்த அஞ்சு ரியால் சட்டை ஆகிப்போனது.

இது நடந்து ஏழாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. என் உயரத்திலும் எடையிலும் அதிக மாற்றமில்லாததால், இன்னமும் அந்த சட்டையை அணிந்துகொண்டுதானிருக்கிறேன். ஒரு நூலிழை கூட பிரியவில்லை. முதலில் போடும்போது இருந்த பொலிவிலும் மாற்றமில்லை.

இந்தமுறை பயணம் போகும்போது மற்றொரு சட்டையை எடுத்துசென்ற சொந்தத்திடம் "எதாவது வேண்டுமா இங்கிருந்து" என வினவுகையில், " நீ கல்யாணத்துக்கு வரும்போது ஒரு சட்டை கொடுத்தியே, அதுமாதிரி ஒன்னு ரெண்டு புடுச்சுக்குனு வாடா. நல்ல சட்டைடா அது " என்றார்.

அந்த அஞ்சு ரியால் சட்டையை எங்கிருந்து தேட..

Saturday, January 7, 2012

கடலூர்- உறைந்த உயிர்கள் - கரைந்த கனவுகள்

ஆனந்த விகடனில் எல்லோரும் "என் ஊர் " என்று எழுதுவதை வாசிக்கையில் நாமும் நம்ம ஊரைப்பற்றி கொஞ்சம் எழுதிப்பார்க்கலாமே என்று அடிக்கடி தோன்றும். யாருமே வாசிக்காத நம் எழுத்தை மெனக்கிட்டு எழுதவேண்டுமா என்கிற சோம்பலில் எழுதுவதே இல்லை.

இன்று எழுதிகிறேன். என் ஆழ்மனதினில் கரைந்து ஒடும் துக்கத்தை பதிந்திட வேண்டுமென எழுதுகிறேன். இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் என் ஊரை பற்றி எழுதுவேன் என கனவு கூட வந்ததில்லை.

கூப்பிடும் தூரத்தினில் கடல். கவிதை எழுதி விளையாட ஆறு. பச்சை வர்ணம் பூசிய வயல் வெளிகள். ஏறி விளையாட ஏரி. நெல், கரும்பு, முந்திரி, மா, பலா, மல்லாக்கொட்டை, கிழங்கு, நொங்கு, தென்னை என இந்த மண்ணில் எதை விதைத்தாலும், பொண்ணாகவே வளம் தரும். எல்லாமே கைக்கெட்டிய தூரத்தினில்.

இயற்கை அள்ளித்தந்த வளங்களை இன்று அதே இயற்கைக்கு காவு கொடுத்துவிட்டு கலங்கி நிற்கிறோம்.

சோறு போட்ட நிலத்தினில் சேறும் சகதியும் மட்டுமே தேறி நிற்கிறது.
குடிசை வீடுகள் என்று ஒன்று இருந்த சுவடே இல்லை.
அறுவடைக்கு காத்திருந்த நெல்வயல்கள் கருக்கலைந்து போயிருக்கிறது.
காலம் காலமாய் குலைதள்ளிய தென்னை, நிலைகுலைந்து காணப்படுகிறது.
பல ஆண்டு பழந்தந்த, பலன்தந்த பலாமரங்கள் நிலம் வீழ்ந்து கிடக்கிறது.
வயலில் வளர்த்த வாழைமரங்கள் வாசலில் வந்து கிடக்கிறது.

எல்லாம் நான்குமணிநேர புயலினால்.


எங்கள் வாழ்கையை நாற்பதாண்டுக்கு பின்னால் இருந்து நாங்கள் துவக்கவேண்டும்.

இன்றுவரை மின்சாரமில்லை. நியாயவிலைக்கு பால்தந்த பண்ணைகள், அநியாயத்துக்கு நிலைக்குலைந்து போய் உள்ளன. துரும்பை கூட தூக்கிப்போடாத அரசாங்கம் கணக்கு மட்டுமே எடுத்துசெல்கிறது. யாரும் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை.எல்லோரும் உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்க யாரை அழைப்பது. குடிசைவாசிகளின் வீடு நடுத்தெருவாகிப்போனது. அள்ளித்தந்த கைகளுக்கு கிள்ளிதரக்கூட யாருமில்லை.

" என் அறுபதாண்டு வாழ்வில் இதுபோன்று ஒரு புயலை சந்திச்சதில்லை.மரம் விழுந்து பார்த்திருக்கிறேன். உடைந்து இப்போதுதான் பார்க்கிறேன். சுனாமி பல உயிர்களை கொன்றுசென்றது. இந்த புயல் பல உயிர்களை மட்டுமே விட்டுவிட்டு எல்லாவற்றையும் கொண்டுசென்றுவிட்டது."

" மரங்களில் பல கிளையில்லாமல்போனது. கிளையுள்ள மரங்களில் இலை இல்லாமல் போனது. காக்கா, குருவிகள் காணாமல் போயிருக்கிறது. "

" வெட்டுக்கு காத்திருந்த கரும்பினில் சோலைகள் இல்லை. அஞ்சு லட்ச கடனில் அம்பது சதவீதம் கூட அடையாது."

" தையில் அறுக்கவேண்டும். வைக்கோல் கூட தேறாது. நெல்லை விதைத்து விட்டு புல்லை அறுக்கவேனும்."

" அண்ணன் தம்பி மாமன் மச்சான்னு பாக்கல. தலைக்கட்டு அறைலிட்டரென அதே விலையில் பால் கொடுத்தேன். 'ஷெட்' எல்லாம் காத்துல போய்டுச்சு. கைய காலப்பிடிச்சி கடன்வாங்கித்தான் பால்பண்ணை வச்சேன். நாலு மணிநேரத்துல நாலு லட்சம் போய்டுச்சு"

" நாளைக்கு நானூறு வரும். கரண்டில்லாம கம்ப்யூட்டர் போடல வருமானம் போதல"

இது நான் அலைபேசியில் அழைக்கையில் சொந்தங்களும், நட்புக்களும் கொட்டியவை. இது போல ஆயரம், லட்சம் கதைகள், அத்தனையும் உன்மைகள்.

தொட்டுவிடும் தூரத்தினில் இருக்கும் பண்ரூட்டியில் அவலம் இன்னும் அதிகம்.

விழுந்த பலாமரங்களில் மகனின் கல்லூரி கனவு வீழ்ந்திருக்கிறது. மகளின் 'மண' கனவு கவிழ்ந்திருக்கிறது. முற்றுபெறாத வீடு நின்றிருக்கிறது.

இன்று வைக்கும் முந்திரி கன்று இன்னும் பத்தாண்டுக்கு பின்னரே பழம்தரும். அதுவரை சோறுக்கு என்னவழி, கரைசேர்க்க காத்திருக்கும் பிள்ளைகளுக்கென்ன வழி.

என்ன செய்ய போகிறது அரசாங்கம். எங்கள் உழைப்பினில் உண்ட உலகம் என்ன தரப்போகிறது எங்களுக்கு. எங்கள் வியர்வையில் பசியாறிய உயிர்கள் என்ன தீர்வு தரப்போகிறது. இறைவனே அறிவான்.