Thursday, November 28, 2013

தாத்தா நினைவலைகள்-2

எனக்கு நினைவு தெரிந்தது முதல் தாத்தா சைக்கிள் வைத்திருந்தார்.   பள்ளிவாசல், ஊரில் இருந்த கல்யாண மண்டபம், வயக்காடு என எங்கு செல்வதானாலும் அவர் பெரும்பாலும் சைக்கிளில்தான் செல்லுவார். கடலூர், நெல்லிக்குப்பம், பண்ரூட்டி, விழுப்புரம் என அருகிலுள்ள பல ஊர்களுக்கு அவர் சைக்கிளிலேயே சொல்வதை பார்த்திருக்கிறேன்.

அவருடைய சைக்கிளுக்கென சில தனிச்சிறப்புகள் உண்டு. அதை அவர் ரெடிமேடாக வாங்கியதில்லை. என் ’ட்ராயர் போட்ட’ வயதில் ஊரில் ஷரீப் பாய் சைக்கிள் கடையென்று ஒன்று இருந்தது. அங்கேதான் அவருடைய சைக்கிள் உருவாக்கம் நடைபெரும்.பெல்-கப், வீல்-கம்பி, ஹாண்டில் பார், ஸீட் கவர், சைக்கிள் செயின், பெடல், ட்யுப், டையர்,  என ஒவ்வொன்றாக கோர்க்கப்பட்டு முழு சைக்கிள் உருவாகிடும் அழகினை விழிகளை விரித்தவாறு பார்த்திருக்கிறேன். இடையிடையே சைக்கிள் கடைக்காரர் தேனீர் குடிக்க எழும்போதெல்லாம் எனக்கு கடுமையான கோபம் வரும். அவர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார் என தாத்தாவிடம் கூறியது நினைவில் நீங்காதிருக்கிறது. என்னை சமாதானப்படுத்தும் நோக்கில் தின்பதற்கு ஏதாவது வாங்கித்தருவார்.

சைக்கிளின் பின்புறம் வைக்கப்படும் கேரியர் கூட அவர் அப்படியே வாங்கியதில்லை. அதை கூட அளவு சொல்லி பட்டறையில் செய்து வருவார். மூட்டை வைக்க தேவையான அளவிலிருக்கும். செயின், வீல் முதல்கொண்டு எல்லாமும் சராசரி சைக்கிளை விட கொஞ்சம் தடிமனாகவும் பெரியதாகவும் இருக்கும். அதனாலேயே சைக்கிளின் எடை கூடி வெயிட்டாக இருக்கும். ஆனால் தாத்தாவுக்கு அது சுமையாக இருந்ததில்லை. மிக சாதரனமாகவே அதை அவர் ஓட்டிச்செல்லுவார்.

மூன்றாவது அல்லது நான்காவது வகுப்பு விடுமுறையின்போது வீட்டில் தாத்தா இல்லாத ஒரு நாள் குரங்கு பெடல் அடிக்கையில் நான் கீழே விழுந்து, அத்தனை கணமான சைக்கிள் என் மேலே விழுந்தது. இடது கையில் மூன்றுமாதங்களுக்கு கட்டுபோட்டிருந்தேன். இன்றைக்கும் கணமானதெதையும் தூக்கிடும்போது சுரீரென வலிக்கும். அப்படி வலிக்கும்போதெல்லாம் அவரும் சைக்கிளும் கண்திரையில் வந்து போவதுண்டு.

தாத்தா நினைவலைகள்-2

Wednesday, November 27, 2013

தாத்தா நினைவலைகள் - 1


தாத்தாவுக்கு அப்போ 65 வயசு. காலைல வீட்டுல சாப்பிட்டுட்டு சைக்கிளை எடுத்துட்டு போனவரு, மதிய சாப்பாட்டுக்கு வரல. சரி ஏதோ தோட்டத்துல வேலை இருக்கும் என யாரும் அவ்வளவு சீரியஸா எடுத்துக்கல. இருட்ட தொடங்கிய பின்னும் அவர் வீடு திரும்பாதது எல்லோரையும் கொஞ்சம் கலக்கம் அடைய செய்தது. அக்கம் பக்கம் விசாரித்தவரையில் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. தொலைப்பேசி வசதிகள் அதுவரை அண்டாத கிராமம் அது. சிறிய கிராமம் என்பதால் நாங்கள் எல்லோரிடமும் அவரை எங்கேதாவது யாராவது பார்தார்களா என விசாரிக்கையில் “பெரியப்பாவ சொர்னாவூருல சைக்கிள்ள பார்தேனே, உச்சிவெயிலுல” ன்னு சொந்தக்காரரு ஒருத்தரு சொன்னாரு. சொர்னாவூரு 5 கி.மீ. தானே. அங்க போயிருந்தா இந்நேரத்துக்கு வந்திருக்கனுமே என்கிற கவலையில் நாங்க எல்லோரும் தேடிக்கொண்டிருக்க, பாட்டி மட்டும் அதிக கலக்கமில்லாமல், “வந்து சாப்புடுங்க.. சின்ன பிள்ளைய தோடுற மாதிரி தேடிறீங்க” ன்னு சொல்லிட்டிருந்தாங்க . ஊரெல்லாம் தேடிட்டு 9 மணி வாக்கில் வீடு வரும்போது தாத்தா சைக்கிளை வீட்டுக்குள் ஏற்றிக்கொண்டிருந்தார்.

சித்தப்பா கொஞ்சம் கோபமாக “ எங்கே போயிட்டிங்க, நாங்க ஊரையே சல்லடை போட்டு தேடிட்டிருக்கோம், சொல்லிட்டு போவ மாட்டிங்களா?” என கேட்க, “எதுக்கு தேடுற, நானென்ன கொழந்தையா, தொலஞ்சி போவ, மோட்டரு காயில் தீஞ்சிபோச்சு, அதான் விழுப்புரம் போயி சரிபண்ணிட்டுவரேன்.” என்றார். அந்த கால பெருசுகள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். வீட்டில் அடுப்பெரிந்ததா எனும் கவலையை விட, நெல்லுக்கு தண்ணி பாய்ந்ததா என்கிற கவலையே அவர்களை அதிகம் ஆக்ரமித்திருந்திருக்கிறது.

30 கி.மீ. போக வர என மொத்தம் 60 கி.மீ அசால்டா போயிட்டு வந்திருக்கார் அந்த அறுபதை தாண்டிய வயதில்.

தாத்தா நினைவலைகள் - 1