Tuesday, September 4, 2012

குரு பாணி


”யார் யாரெல்லாம் கட்டுரை எழுதிக்கொண்டு வரல. எழுதாதவங்க எழுந்து நில்லுங்க ”

ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் கேட்க அந்த வகுப்பிலிருந்த எல்லோரும் அமர்ந்திருந்தனர். என்னைத்தவிர.

”வாங்க தொர. வீட்டுப்பாடம் எழுதமுடியாத அளவுக்கு அய்யாவுக்கு என்ன வேல?”

“ராத்திரி கரண்ட்டு இல்ல சார். காலை’ல எழுதிக்கலாமுன்னு நினைச்சேன் சார். ஞாபகம் இல்லாம தூங்கிட்டேன் சார்.”

“இன்னைக்கு போடுற போடுல இனிமே மறதியே வராது. அப்படி கிளாசுக்கு வெளில போயி நில்லுங்க சார். பசங்களோட வீட்டுப்பாடத்த திருத்திட்டு வந்து கவனிச்சிக்கிறேன்”.

ஒருவித கலக்கம் வந்துவிட்டது எனக்கு. இந்த ஆங்கில ஆசிரியர் அடிப்பதற்கென்றே பேர் வாங்கினவர். அதுவுமில்லாம இன்று தொடந்து இரண்டு பீரியட் அவருடையது. அவருக்கென்று ஒரு பிரத்யோக பிரம்பு வைத்திருப்பார். மூங்கில் போன்றதொரு குச்சியில் முழுதும் சிகப்பு நிற டேப் சுற்றப்பட்டிருக்கும்.

பாடங்களை பார்வையிட்டுவிட்டு, “எல்லோரும் அவரவர் எழுதிவந்த கட்டுரையை வருகைப்பதிவேடு வரிசைப்படி ஒவ்வொருத்தரா எழுந்து படிங்க” என கூறிவிட்டு பிரம்பு கையோடு என்னிடம் வந்தார். “தொர மறந்துட்டீங்களா, இனிமே மறக்கவே மறக்காது” என அடிக்க துவங்கினார்.

கை, கால், முதுகு, பட்டெக்ஸ் என எதையும் விட அவருக்கு மனமில்லை. அடித்தார். அடித்தார். அடித்துக்கொண்டே இருந்தார். ஒரு அடிவாங்கிய வலி குறைவதற்குள் அடுத்த அடி விழுந்தது. அழுகை சத்தம் பக்கத்து வகுப்பறைகளில் கேட்டிருக்கக்கூடும். அந்த வகுப்பாசிரியர்கள் எட்டிப்பார்க்க வெட்கம் வந்தது. ஆனாலும் அவர்களில் யாராவது ஒருவர் வந்து இதை தடுத்திட மாட்டார்களா என்கிற ஏக்கமும் வந்தது. யாரும் வரவில்லை. என் அழுகை சத்தம் அதிகரிக்கும்போது மட்டும் எட்டிப்பார்த்து, பின் தலையை உள்ளிழுத்துகொண்டனர்.

ஒரு கட்டத்தில் பிரம்பு நார்நாரானது. வலியை மீறிய ஒரு நிம்மதி வந்தது. அந்த நிம்மதி வெகு நேரம் நீடித்திருக்கவில்லை. வகுப்பிலிருந்த ஒரு மாணவனை அழைத்து “ எலே..கீழ ஆபிஸ் ரூமுல இது மாதிரி ஒரு பிரம்பிருக்கும். எடுத்துட்டு வா” ன்னு அனுப்பி வைக்க வயிறு கலக்க ஆரம்பித்தது.

மீண்டும் அடிக்கும் படலம் தொடங்கியது. அவருக்கு கை வலிக்கும்போது வகுப்பறையை இரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் தொடங்குவார். உடலெங்கிலும் ஒரே எரிச்சல். முதுகில் தொடர்ந்து அடித்ததனால் சட்டை வேறு பின்புறம் கிழிந்துவிட்டிருந்தது. பொதுவாக ஒருவனை அடிக்கும்போது மற்ற மாணவர்களுக்கு ஒரு வித குறுகுறுப்பிருக்கும். இந்த முறை அதுபோன்றதொரு உணர்வு யாருடைய முகத்திலும் தென்படவில்லை, “ஐயோ பாவம்” என்கிற கவலையே தெரிகிறது.

இரண்டு வகுப்பு முடியும் வரை அடிக்கிறார். கண்களில் இவ்வளவு கண்ணீர் வரும் என்பதினை அன்றுதான் அறிகிறேன். மணி அடிக்கும்போது ஒருவித அமைதி வந்துசேர்கிறது மனதினில்.

“நியெல்லாம் உருப்பட்டீனா நான் வாத்தியார் தொழிலையே விட்டுடுறேன்” என சொல்லிவிட்டு பிரம்பை என்மேல் வீசி செல்கிறார்.

-ஆசிரியர்தின சிந்தனை

Monday, August 27, 2012

மகிழ்ச்சி


சவுதி நேரம் 6 மணி. கைப்பேசி அடித்தது. தூக்கத்தில், அலாரம்தான் அடிக்கிறதென அவசரமில்லாமல் எழுந்து வந்து பார்ப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அரைதூக்கத்தில் அழைப்பா அல்லது அலாரமா என சட்டென புரியவில்லை.மிஸ்டு கால்என திரையில் கண்டவுடன் யாரென பார்த்தேன். இந்தியாவிலிருந்து மைத்துனன். லேசாக பதட்டம் தொற்றிக்கொண்டது. இப்பொழுதெல்லாம் நேரம்தவறி வரும் இந்திய அழைப்புகளை காணும்போதெல்லாம் ஒருவித கலக்கம் வந்துவிடுகிறது. சமீபத்திய மரண செய்திகள் ஏற்படுத்திய பாதிப்பாக இருக்கலாம்.

திரும்ப அழைத்தேன்


ஹலோ

என்ன தூக்கமா??”

எழுந்திருக்கிற நேரந்தான். சொல்லு

இல்ல. தம்பி இஸ்மாயிலு ஏதோ முக்கியமா பேசனும்ன்னான். என்னன்னு நீயே கேளு

கைப்பேசி கைமாறியது.


ஹலோ

சொல்லுடா, என்ன விஷயம்

ஒரு மேட்டர் கேள்விப்பட்டேன். உண்மையா?”

என்ன மேட்டர்?”

“___________________
யாமே?”

டாய்ய்ய் என கத்த வேண்டும் போலிருந்தது.


இந்த காலைவேளைல இது ரொம்ப முக்கியம்

அட சொல்லு. உண்மையா? பொய்யா?”

வெண்ண... போனை வையி, ஆபிஸுக்கு கெளம்பனும். அப்புறமா கூப்பிடுறேன்

அவன் மீண்டும் என்னவோ சொல்ல ஆரம்பிப்பது தெரிந்தது. தொடர்பை அணைக்கிறேன்.


--------------------


மற்றொரு நாள் அம்மாக்கு அழைக்கையில் இதே போன்றதொரு கேள்வி.


“__________________________
யாமே..ரொம்ப சந்தோஷமா இருக்கு

இதெல்லாம் ஒரு விஷயமாம்மா..யாரு சொன்னது உனக்கு

நல்ல விஷயமில்லையா..யாரு சொன்னா என்ன?”

சரி வை நாளைக்கு கூப்பிடுறேன்”.

ஒரு மாதிரி குற்றவுணர்ச்சியில் தொடர்பினை சட்டென துண்டிக்கிறேன்.


---------------------


நண்பர்கள்
, தங்கைகள், சொந்தங்கள் என நிறைய அழைப்புகளில் இதே கேள்வி தொடர்கிறது. யாருக்கும் ஆமாம், இல்லையென பதில் சொல்லாமல், “ஒலகத்துல இது ரொம்ம்ம்ப முக்கியமான விஷயம். எல்லாரும் இதையே கேட்டுகிட்டுஎன மழுப்பலாகவே பதிலளிக்கிறேன்.

----------------------


இரண்டு மாதங்கள் முழுமையடைந்து இருக்கிறது
, புகைப்பதை நிறுத்தி.

----------------------

திருமணம் முடிந்த நாளிலிருந்தே நாளைக்கு நாலு முறையாவது ‘விட்டுடுங்கசொல்ல சலித்ததில்லை மனைவி. அன்பாகவும் அழுதும், சண்டையிட்டும், குழைந்தும் என எல்லா ஆய்தங்களையும் உபயோகித்திருக்கிறாள். ஒவ்வொரு அழைப்பிலும், மறந்தும் சொல்ல தவறியதில்லை அம்மா. நலம் விரும்பிகள் நட்பூக்கள் என பலரும் வற்புறுத்தி வந்திருக்கின்றனர்.  

உணவில் குழம்பு, பொரியல் போன்ற கலவையோடு கடைசியாக புகைப்பதையும் சேர்த்துவைத்திருந்தேன். உண்டபின் புகைக்காவிடின் உண்ட திருப்தி வருவதில்லை என நம்பினேன். கையில் புகையாமல் காலைக்கடன் முடியாது என தீர்மானம் கொண்டிருந்தேன். கோபமும் இயலாமையும் வருகையில் உற்ற துனைவனாக, நம்பிக்கை தருபவனாக சிகரெட் இருப்பதாகவே உரக்க சொல்லிவந்திருக்கிறேன். சிகரெட் புகைந்துகொண்டு இருக்கையிலே சிந்தை சிறப்பாக செயல்படுகிறதென கர்வம் கூட கொண்டிருக்கிறேன்.

’இந்த மாமா மேல பேட் ஸ்மெல்(Bad Smell) அடிக்கிறது’ என சின்னஞ்சிறுப்பூக்கள் சொல்லும்போதும், ’சிகரெட் குடிச்சிட்டு பிள்ளைகளுக்கு முத்தம் குடுக்கிறீங்களே, அந்த நாத்தம் அவங்க மேலையும் அடிக்குது’ என மனைவி சுட்டிக்காட்டும்போதும், ’பல்லெல்லாம் மஞ்சலா இருக்கு, ஒதடு ஒரே கருப்பா இருக்கு’ என சொந்தங்கள் கேலி பேசிய போதும், ’சளி குறையவே மாட்டேங்குது டாக்டர் என்றால், சிகரெட்டை நிறுத்துங்க தானாகவே குறைந்து விடும்’ என மருத்துவர் நகைத்தபோதும் என் தன்மானம் சீண்டப்படுவதாகவே எண்ணினேன். கொஞ்சமும் வெட்கம் கொள்ளவில்லை. என் உடையெல்லாம் சிகரெட் வாசமே நிறைந்திருப்பதாக சுட்டிக்காட்டியவர்களிடம் பெருங்கோபம் கொண்டு சண்டையிட்டிருக்கிறேன்.

என்றாலும் நிறுத்திவிட வேண்டுமென்ற சிந்தனையை நாள் முழுதும் என் சிந்தையில் ஏற்றியவாறே இருந்த குடும்பத்தினரும் நட்பூக்களும் கடைசியில் வென்று விட. சட்டென ஒரு நாள் நிறுத்தினேன்.இதை நிறுத்தியதொன்றும் சாதனையில்லைதான். உண்மையில் புகைக்கும் சுவையில் சுகம் கண்டவருக்கு அதிலிருந்து முற்றிலுமாக வெளிவருவது அத்தனை சுலபமான விஷயமில்லை. பிரிதொரு சந்தர்ப்பத்தினில் பலரும் மீண்டும் இந்த பழக்கத்தினை தொடங்கிவிடுவதாக அறிந்தே இருக்கிறேன். அதுபோன்றதொரு சந்தர்ப்பத்திலிருந்து இறைவன் என்னை காத்திட வேண்டுகிறேன். ஏனெனில் புகை தொடர்பினை விட்டொழித்ததில் நான் அடைந்திட்ட மகிழ்ச்சியினை விட என் நெருங்கிய சுற்றத்தார் அடைந்திருக்கும் சந்தோஷமானது நிலைத்திருக்கவே நான் விரும்புகிறேன்.

Saturday, July 7, 2012

இருவர்


ண்டையிட்டுக்கொண்டு சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடிவிட்டார். எனக்கு மாமா முறை. நீண்ட நாள் கழிந்து தந்தையின் மரண செய்தியறிந்து திரும்பி வந்து மீண்டும் குடும்பத்தோடு இணைந்து கொண்டவர்.  பின்னர் பணிக்காக வளைகுடா பயணம். கடிண வேலை என்றாலும் சுமாரான ஊதியம், நிலையான நிறுவனம். கொஞ்சம் தாமதமாக திருமணம்.  அடுத்தடுத்து மூன்று ஆண் பிள்ளைகள். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை விடுமுறைக்கு வரும் மாமா எனக்கு அதிகம் பழக்கமில்லை என்றாலும் அவரை ஏனோ எனக்கு பிடிக்கும்.   அளவாக ஒரு இடம் வாங்கி அதிலே அழகாய் ஒரு வீடு. பிள்ளைகளில் இரண்டு பேர் படித்து முடித்து பணியிலிருந்தனர். கடைக்குட்டி படித்துகொண்டிருந்தான். இருபதுக்கும் அதிகமான வருடங்கள் வளைகுடா வாழ்க்கைக்கு பின் உடல் நலமில்லாமல் வீடு வந்துவிட்டார்.

வர் குடும்பத்தின் முதல் ஆண்மகன். அக்காக்கள், தம்பிகள், தங்கைகள் என கொஞ்சம் பெரிய குடும்பம். தந்தையின் ஒரே வருமானம் போதாமல் போனதில் இளம் வயதிலேயே வளைகுடா வாசம். மிகக்கடினமான பெட்ரோல் போடும் வேலை. வெயில், மழை, குளிர் பொருட்படுத்தாது வேலை செய்திடல் வேண்டும். கொஞ்சம் நல்ல நிலை வந்தபின் திருமணம். தாமத திருமணம். மீண்டும் வளைகுடா வாசம். நான்கைந்து வருடம் கழிந்து, பெட்ரோல் வாசமும், அது தரும் அலர்ஜியும் பொறுக்காது வீடு திரும்பிவிட்டார். அடுத்தடுத்து மூன்று பெண்பிள்ளைகள். தனிக்குடித்தனம், வருமானமில்லாமல் நாட்கள் நகர மறுக்க,கடன் சுமைகள் கூடிவிட மீண்டும் வேலை தேடி வளைகுடா வாசம். ஒரு வருட போராட்டம், அலைச்சலுக்கு பின் வங்கியில் பியூன் போன்றதொரு வேலை, சுமாரான வருமானம். இரண்டு வருடம் எந்த இடையூறும் இல்லாமல் கழிந்தது. விடுமுறைக்கு வீடு வந்து சென்ற பின் அந்த வேலையில் வேறு ஒருவர் நிலைத்திட, இவருக்கு கடினமான வேலை தரப்பட, உடலும் மனமும் ஒத்துழைக்க மறுக்க, உடல்நலம் பாதிப்படைந்து வீடு திரும்பவேண்டியதாகிவிட்டது.

ந்த இருவரும் இன்று உயிரோடு இல்லை.

ருவருக்கும் அலர்ஜி, நுரையீரல் புண், சளி தொந்தரவு என சில நோய்கள் இருந்தது. ஆனாலும் எல்லா நோய்களுக்கும் ஒரு மூல காரணம் இருந்தது. அது புகைப்பிடித்தல்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில், ஒரு மருத்துவர், "கடவுள் ஒரு குடும்பத்த சோதிக்கனுமுன்னு நினைச்சா அந்த வீட்ல யாரவது ஒருத்தருக்கு கான்சர் நோய குடுத்துட்டா போதும்" ன்னு சொன்னார். உண்மைதான். ஒரு வீட்டினுடைய சேமிப்பு, சந்தோஷம், எதிர்காலம் அத்தனையும் புரட்டிபோட வல்லதுதான் புற்றுநோய்.

நானும், நண்பர்களும் விரும்பி சுவைத்துகொண்டிருந்த புகையிலை, இது போன்ற நெருக்கமானவர்களின் இழப்புகளின்போது மிகுதியாய் கசக்கிறது.

ரணம் என்பது எல்லாரும் சுவைத்தே ஆகவேண்டிய கசப்புமருந்துதான். அந்த கசப்பென்பது விதித்தவருக்கு மட்டுமேயன்றி, சுற்றத்தாருக்கும், சொந்தங்களுக்கும் விதித்ததில்லை.

வல்லமை தந்துவிடு இறைவா..

Sunday, June 17, 2012


 மழைக்காதலன்

பாலைவன சோலைகளில் பணி என்றாகிவிட்ட பின் வருடாந்தர விடுமுறையை பெரும்பாலும் அக்டோபர்-நவம்பர் மாதங்களிலேயே செல்ல விரும்புவேன். சொல்லத்தக்க காரணிகள் எதுவுமில்லை என்றாலும் கடலோர தென்னாற்காடு மாவட்டங்களில் மழைக்காலம் அது. எங்கேயும் செல்ல முடிவதில்லை என மனைவியின் சிணுங்கல், பருவநிலை மாற்றத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் சுகமின்மை போன்ற இடையூறுகள் இருந்தாலும், எங்கள் வீட்டு முன்வாசலில் இடப்பட்டிருக்கும் பெஞ்ச்'ல் அமர்ந்தும், மொட்டைமாடியில் இடப்பட்டிருக்கும் கீற்றுபந்தலின் ஊடாக மழையை ரசிக்கவேண்டும் என்பதே முன்னுரிமையாக இருந்திருக்கிறதெனக்கு..!!!


அடர்மழையின் சத்தத்திற்கு எந்த இசையும் ஈடில்லை. நல்ல உறக்கத்தில் இருந்தாலும் சடசடவென பெய்யும் மழையின் சத்தம் கனவில் கூட ஒலித்துக்கொண்டிருப்பது போலவே தோன்றும். வீட்டுக்குள் மழை பெய்யாதென்றாலும், வீடு நனைந்தே இருக்கும். வீட்டுக்குள் குளியலறை இருந்தும் தோட்டத்தில் சற்று தொலைவிலிருக்கும் குளியலறையில் மழை சாரலோடு குளிக்கவே மனம் விரும்பும். காலனிகளை தவிர்த்து பெரும்பாலும் வெறும் காலுடனே எங்கள் கிராம தெருக்களில் சுற்றுவேன். உள்ளம் நனைக்கும் மழையை அறியப்பெறுவேன்.



ஒருமுறை தந்தை, மைத்துனன் சகிதம் எங்கள் வயலுக்கு சென்றிருந்தேன். நடுவயலில் நடந்துகொண்டிருக்கையில் சட்டென பொழிய துவங்கியது மழை. கொஞ்ச தூரமருகில் இருந்த கொட்டகைக்கு ஓடுகிறார்கள் தந்தையும் மைத்துனரும். நான் மிகப்பொறுமையாக மிக மிக பொறுமையாக நடக்க வியப்புடன் பார்த்த தந்தையை இன்னமும் நினைவிலிருக்கிறது. நான் மழைக்காதலன் என எப்படிச்சொல்வது அவரிடம்.

Monday, June 11, 2012

எல்லாமும்.... அன்பை தவிர...

எதையோ படித்துக்கொண்டிருக்கும்போது இந்த வரிகள் கண்ணில் பட்டது..

The Older you get
..
The better you understand...
That everything else is just shouting into the Wind...
Everything except LOVE...

எண்ணம் எனும் குரங்கு சடசடவென பதின்ம வயதுக்கு ஓடியது.


ஒரு வெள்ளிகிழமை. தொழுகைக்கு பள்ளியில் அமர்திருக்கையில் முன் வரிசையில் லேசான சலசலப்பு. கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அதிகரிக்கின்றது. எழுந்து என்னவென பார்க்க முன்வரிசைக்கு போகிறேன். எல்லோரும் எழுதுநின்று சத்தமிட்டுக்கொண்டிருந்தனர். பலாப்பழத்தை இரண்டாக பிளந்ததை போல கூட்டம் இரண்டாக பிரிந்து, ஒரு பக்கம் முழுக்க முழுக்க இளைஞர்களும் சிறியவர்களும், மறுபக்கம் என் தந்தை, சித்தப்பா, தாத்தா, அங்காளி-பங்காளிகளுமாக, ஒரே சத்தம். சில வினாடிகளிலேயே என்ன எதுவென எனக்கு விளங்கிவிட்டது.


சிறியவர்கள் ஆர்வமாக சீக்கிரமாக தொழவந்து முன்வரிசை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார்கள். பின்னால் வந்த வயதானவர்களுக்கு(முன் வரிசையிலேயே எப்போதுமே அமர்பவர்கள்) இடமில்லாமல் லேசாக எழுந்த சலசலப்பு பெரிதாகிவிட்டிருந்தது. எதையும் கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் எதிர்கொள்ளும் இளமை எனக்கு. நானும் இளைஞர் பக்கம் நின்று சத்தமிடுகிறேன்.

 

" முன் வரிசை வேணுமுன்னா சீக்கிரம் வரணும். ஆடி அசைஞ்சி வந்தா பின்னாடிதான் உக்காரணும்" - நான்.
" மொதல்ல மூத்திரம் பேஞ்சிட்டு கால ஒழுங்கா கழுவிட்டு, எப்படி தொழனுமுன்னு தெரிஞ்சிட்டு முன்னாடி வந்து ஒக்கார சொல்லுடா" - தத்தா
" காலக்கழுவலன்னு இவருதான் எட்டி பார்த்தாரு.." - மற்றொரு இளைஞன்.
" பெரியவங்க சின்னவங்கன்னு மரியாதை தெரியுதாடா ஒங்களுக்கு, நீங்களெல்லாம் என்னத்த படிக்கிறீங்களோ" - மற்றொரு பெருசு
இப்படியான நீண்ட சலசலப்புக்கிடையில் "தொழுகை நேரமாகிவிட்டது" என இமாம் தொழ தொடங்க அவரவர் கிடைத்த இடங்களில் தொழ தொடங்கினர்.

எனக்கோ கோபம் குறைந்தபாடில்லை. வீட்டுக்கு வந்து காச்மூச்சுன்னு அம்மாவிடம் கத்தினேன். சண்டையின் இடையிடையே " வாயமூடிட்டு சும்மா இரு" ன்னு அப்பா என்னை கண்டித்தது, என் கோபத்திற்கு மேலும் நெருப்பு மூட்டியது. "கொஞ்சமாச்சும் நேர்மையா இருக்க தெரியுதா. வயசானாலே புத்தி வேலை செய்து போல" ன்னு அம்மாவிடம் எகுறுகிறேன்.


அப்பா வந்து என்ன சத்தமுன்னு கேட்டுட்டு " டேய், ஏற்கனவே அவருக்கு (தத்தாவோட தம்பி) ரெண்டுவாட்டி அட்டாக் வந்திடுச்சு..நீ பாட்டுக்கு கத்திட்டிருந்தினா அவரும் டென்சனா ஆகி ஏதாவது ஆயிடுச்சுனா ஒனக்கு சந்தோசமா இருக்குமா. சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் இப்படி மல்லுகட்டிட்டு இருந்தா எதுவுமே சரியா வராது. ஒனக்கு இப்ப இதெல்லாம் புரியாது. உன் வயசு அப்படி" ன்னு சொன்னார்.


மறுபடியும் அந்த வரிகள்


The Older you get..

The better you understand...
That everything else is just shouting into the Wind...
Everything except LOVE...

Saturday, June 9, 2012

என்னோடு பயணித்த ஸ்கூட்டர்..


பச்சையுமில்லாமல் நீலமுமில்லாமல் ஒருமாதிரி இங்கிலீஷ் நிறத்தில் எங்க வீட்டில் ஒரு ஸ்கூட்டர் இருந்தது. பஜாஜ் கப். அந்த ஸ்கூட்டர் வரலாற்றில் ஒரு தனித்துவம், என்னவென்றால், ஓட்டியவரை ஏதாவது ஒரு சந்தர்பத்தில் கிழே தள்ளியிருக்கும். அதில் சில்லறை வாங்காதவர் வெகு சொற்பமே. நானும் விழுந்திருக்கிறேன்.






ஒரு ஜூன் மாத மதியம். மாமா தன்னோட சிநேகிதன் ஒருத்தர கூட்டிக்கிட்டு வந்து " இல்யாஸ், இவருக்கு பக்கத்துல மாளிகைமேட்டுல ஏதோ சின்ன வேலை இருக்காம். கொஞ்சம் ஸ்கூட்டர்'ல  கூட்டிட்டு போய் வந்துரு" ன்னாரு. வெட்டி ஆபிசரா இருக்குறதுனால இதுக்கெல்லாம் அறச்சீற்றம் கொள்ளமுடியாது. சரின்னு சட்டைய மாட்டிட்டு கிளம்பிட்டேன். வேலை முடிஞ்சி திரும்பி வர்றப்ப வீட்டுக்கு 5 கி.மீ. இருக்கும்போது வண்டி ஆப் ஆயிடுச்சு.. என்ன எதுன்னு பாக்கறதுக்குள்ள அந்த வழியா வந்த பஸ்ஸ நிறுத்தி ஏறிட்டு , "தம்பி, என்னன்னு பாத்துட்டு வந்துடு, எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கு"ன்னு போயிட்டாரு மாமாவோட சிநேகிதரு. மதிய வெயிலு, ஈ, காக்கா இல்லாத ரோடு. சாய்ச்சி,  ஓதச்சி ஸ்டார்ட் பண்ணி பாக்குறேன். ம்ஹும். பருப்பு வேகல. அஞ்சு கி.மீ. தள்ளிகிட்டே வந்து மெக்கானிக்கிட்ட காமிச்சா, "வென்று, பெட்ரோல் இல்லாம எப்படிடா ஸ்டார்ட் ஆகும்" ன்னு திட்றாரு. போற அவசரத்துல பெட்ரோல் இருக்கான்னு செக் பண்ணாம போனது என் தப்புதான். வெட்டியா வீட்டுல படுத்திருந்த என்னைய, யாரோட வேலைக்கு போனேனோ அவரு, இவனை இப்படி நட்ட நடுவுல விட்டுட்டு போறோமே என்கிற குற்றவுணர்ச்சி கொஞ்சம்  கூட  இல்லாம போனாரே, அவரு மேல கொல வெறியில வீட்டுக்கு வந்தேன். மாமாகிட்ட அன்று போட்ட சண்டைல மனுஷன் ரொம்ப நாளு என்கிட்டே பேசல.


பரங்கிபேட்டையிலிருந்து தோஸ்த் ஒருத்தன் எங்கூருக்கு வந்திருந்தான். செகண்ட் ஷோ போலாமுன்னு ப்ளான் போட்டோம். நானு, லோக்கல் தோஸ்த் ஒருத்தன், விருந்தாளி தோஸ்த் மூணுபேரும் பக்கத்துல இருக்க பண்ரூட்டி போலாமுன்னு முடிவு. பஸ்சுல போனா செகண்ட் ஷோ முடிஞ்சு வரும்போது பஸ் இருக்காது. ஸ்கூட்டர்ல போலாம்னு சொன்னானுங்க. அன்னிக்கு பார்த்து அதுல ஒரு சிக்கல். லைட்ட போட்டா ஹாரனும் சேர்ந்து அடிக்கும். சரி சமாளிப்போமுன்னு வண்டிய எடுத்தாச்சு. ஊர் எல்லைய தாண்டுரவரைக்கும் லைட் தேவைப்படல. அப்புறமா லைட்ட போட்டா "டர்ர்ர்ர்ர்ர்ர்"ன்னு ஹாரன் சத்தம். முன்னாடி ஒரு லாரி போயிட்டிருந்துச்சு. லைட்ட ஆப் பண்ணிட்டு லாரிக்கு பின்னாடியே ஓட்டிட்டு போனேன். கொஞ்சம் கொஞ்சமா வேகமெடுத்தது லாரி. நானும் விடாமல் பின்னாடியே போனேன். ரயில்வே கேட்டுக்கு கிட்ட இருந்த ஸ்பீட் ப்ரேகரில் சட்டுன்னு பிரேக் போட்டுட்டான் லாரிக்காரன். நானும் அவசரமா பிரேக் போட ஸ்கூட்டர் ஸ்பீட் குறைந்து, நிற்க போகும் நேரத்தில் சாய ஆரம்பிச்சிடுச்சு. பின்னாடி உட்கார்ந்திருந்த தோஸ்துங்க வண்டி ஸ்லோவாயிட்டதால ஈசியா இறங்கிட்டானுங்க. நான் வண்டி விழுதேன்னு விடாம இருந்ததுல பக்கவாட்டில் இருக்கு மட்கார்ட் வலது கால பதம் பாத்துடுச்சு. கட்டியிருந்த கைலி திரைச்சீல மாதிரியாயிடுச்சு. பின்னாடி வந்த பஸ் கண்டக்டர் எட்டி பார்த்து " பன்னாடைங்களா, நீங்க குடிச்சிட்டு சாவறதுக்கு எங்க வண்டிதான் கிடைச்சுதா?"ன்னு போறபோக்குல வாழ்த்திட்டு போறாரு. "ஆமா, இவருதான் வந்து ஊத்திக்குடுத்தாரு"ன்னு சண்டை போடவெல்லாம் சக்தி இல்ல. காலெல்லாம் ஒரே எரிச்சல். இருட்டுல என்ன ஆச்சுன்னு பாக்க முடியல. சரி, இனி சினிமாவுக்கெல்லாம் போகமுடியாதுன்னு, வீட்டுக்கு வந்துட்டோம். வந்து கால பாத்தா, ஐஸ்-கரீம கரண்டியால மேலோட்டமா வழிச்சா மாதிரி காலுல தோல் வழிட்டிக்கிட்டிருந்தது.  நாளு நாளைக்கு நடக்க முடியல.


அந்த ஸ்கூட்டர்'ல 80 , 90 ன்னு போனத இப்ப நினைச்சாலும் பகீர்'னு இருக்கு.


அப்பா ஒருதரம் அம்மாகிட்ட "தெருவுல எல்லாம் ரொம்ப வேகமா போறான் ஒம்புள்ள, எல்லாரும் எங்கிட்ட வந்து பிராது குடுக்குறாங்க, அவன கொஞ்சம் பாத்து பொறுமையா போவச்சொல்லு" ன்னு சொன்னாரு. அம்மா அதுக்கு "ஆமா ஒங்கள மாதிரி வயசானவங்க போற மாதிரி உருட்டிக்கிட்டா போவான். இளவயசு, கொஞ்சம் அப்பிடி-இப்படித்தான் இருப்பான். போவிங்களா'ன்னு சொல்லவும், சீரியஸா சொன்ன அப்பா " ஒன்கிட்ட வந்து சொன்னேன் பாரு" ன்னு சிரிச்சிகிட்டே போயிட்டாரு.!!        





Saturday, April 7, 2012

மின்சாரமும்..மண்சோகமும்


ஒரு செய்தியை அவசியமாய் அப்பாவிடம் சொல்லவேண்டும். தொலைப்பேச கொஞ்சம் தயக்கம். வளைகுடா நேரம் இரவு 9 :30 தானென்றாலும் இந்தியநேரம் 12 :00. இரவு பத்து மணிக்கெல்லாம் தூங்கிவிடும் அவரை எழுப்ப தயக்கமென்றாலும், செய்தி முக்கியம். தொலைப்பேசினேன். ஒரே 'ரிங்'கில் எடுத்தார். விஷயத்தை சொல்லிவிட்டு," என்னப்பா தூங்கலையா?" ன்னு கேட்டேன். "எங்க தூங்குறது. கரண்ட் இல்ல " ன்னார் .

கடலூரிலிருந்து 15 கிமி. தூரத்திலிருக்கும் எங்கள் கிராமமானது 90 விழுக்காடு விவசாயபூமி. கரும்பும் நெல்லும் முக்கிய பயிர். என் பால்யத்தில் பயிர்விளைந்து நின்ற நிலங்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குடியிருப்புகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. மிச்சம்மீதி இருக்கும் விளைநிலங்களில் பயிர் செய்து கொண்டிருப்பவர்களெல்லாம் சீக்கிரம் விற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு மூட்டைகட்ட தயாராகி கொண்டிருக்கிறார்கள். காரணம் மின்சாரம்.


இரண்டு நாளுக்கு ஒருமுறை 3 - 5 மணிநேரம் மட்டுமே மின்சாரம். 4 -5 ஏக்கரில் கரும்புபயிரிட்டிருக்கும் என் தந்தை, " ஒரு சுற்று தண்ணீர் பாய்ச்ச 8 முதல் 10 நாட்கள் ஆகிறது. மூக்கப்பிடிச்சுகிட்டு கரண்ட்வரும் நேரத்த கண்கொத்தி பாம்பா கண்காணிச்சி தண்ணீர் பாய்ச்சினாலே ஒரு மாசத்துக்கு மூணு சுற்று பாய்ச்சமுடியல. இதுல எங்கிருந்து விவசாயம் பாக்குறது" என்கிறார். விவசாயக்காதலரான அவரிடம் இப்படிப்பட்ட சலிப்பினை இதற்கு முன் கேட்டிராத எனக்கு உறக்கம் வரமறுத்தது.

சரி, குடியிருப்பு பகுதிகளில் மின்சார நிலைமை எப்படி இருக்கிறது. கடந்த ஒருமாதகாலமாக காலை 6 - 9 மணிவரையிலும் மதியம் 12 -3 மணிவரையிலும் மட்டுமே தொடர்ச்சியாக மின்சாரமிருக்கிறது. மாலை 6 மணிக்கு வரும் மின்சாரமானது ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு முறை நின்று வருகிறது. அதாவது 45 நிமிடம் மின்சாரமிருந்தால் 45 நிறுத்திவைக்கப்படுகிறது.

வர்த்தக நேரங்களான காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை மின்சாரம் இருப்பது 3 மணி நேரம் மட்டுமே. மின்சாரத்தை சார்ந்து இயங்கும் சிறுதொழில்கள் முற்றிலுமாக சிதைந்து போயிருக்கிறது. பால் சேமிப்பு மின்பற்றாக்குறையினால் கெட்டுப்போய் பால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கணினி சார்த்த சிறுதொழில்கள் இயக்கமில்லாமல் புதைந்துகொண்டிருக்கிறது. இவ்வகை முதலீட்டாளர்கள் நஷ்டத்தினால் நசுங்கி, வருமானத்தை இழந்து வாழ வழியறியாது கலங்கி நிற்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மனம் கலங்கி போயிருக்கும் மக்களுக்கு நிம்மதி தரும் உறக்கமில்லை. இரவினில் தடைபட்டு தடைபட்டு வரும் மின்சாரம் தடையில்லா உறக்கத்தை தர மறுக்கிறது. கொசுத்தொல்லைகளிலிருந்து நேற்று பிறந்த குழந்தைகூட தப்பமுடியாமல் உறக்கம் தொலைக்கிறது.

ஏற்கனவே ’தானேஆடிய தாண்டவத்தில் ஆழ் மனதில் ஆறாத வடுக்களை கொண்டிருக்கும் எம்மக்களை, மனபிழற்வு ஏற்படாமல் காத்திடும் கடமை ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் ஒவ்வொரு அதிகாரிக்கும் உண்டு.

காரும் கணினியும் இன்றி வாழ்வு நகரும். நீரும் சோறும் இல்லாமல் போனால்...?!!!!

Saturday, February 18, 2012

கேரம் போர்ட் - சில நினைவுகள்

நான் கொஞ்சம் சுமாரா கேரம் போர்ட் விளையாடுவேன். கேரம் போர்ட் விளையாடுவதும் அதை அழகாய் விளையாடுபவரையும் காண ரொம்பவும் பிடிக்கும். வேலை வெட்டி இல்லாம ஊர் சுத்திக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் பல இரவுகள் கேரம் போர்டின் துணையுடனேயே கழிந்திருக்கிறது.

பாலிடெக்னிக் முதலாமாண்டில் inter - college கேரம் போர்ட் காம்பட்டிஷன்.டபுள்ஸ். மெக்கானிக்கல் குருப்ல என்னோட, எங்க ஊர் பையன் 'குட்ட' குமாருன்னு ஒருத்தன். கேரம் போர்ட் நல்லா விளையாடுவானோ இல்லையோ, நாம என்ன சொல்லுறமோ அத கச்சிதமா செய்வான். நானும் அவனும் சேர்ந்து ஆடு ஆடுன்னு ஆடி எல்லா பசங்களையும் அடிச்சி துவைச்சிட்டு பைனலுக்கு வந்தாச்சு. யாருடா பைனல்ல நம்ம கூடன்னு பாத்தா பைனல் இயர் சீனியருங்க. ஒரே குருப். நாங்க பர்ஸ்ட் இயர். "பசங்களா ஒங்களுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. அடுத்த வருஷம் வெளையாடி ஜெயிச்சிக்குங்க" ன்னு ஆட்டைய போட்டுட்டானுங்க. சீனியருங்க சொல்லும்போது எதித்தெல்லாம் பேச முடியாது. நொங்கெடுத்துடுவானுங்க விட்டுக்கொடுத்துட்டு வந்துட்டோம். நம்ம கெரகம் அப்படி.



'அமான்' ன்னு ஒன்னு விட்ட மாமா ஒருத்தர். 'பேயாட்டம்' ஆடுவாரு. அவரு கேரம் போர்ட் விளையாடுவத நாள் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம். மனுஷன் ஏழெட்டு காயின அசால்டா தொடர்ந்து போடுவாரு. அவரு செட்டு நாலஞ்சு பேர். டபுள்ஸ் தான் விளையாடுங்க. எப்படியும் ஜெயிச்சிடுவேன்னு எதிராளி நெனச்சிக்கிட்டு இருக்கும்போது சரசரன்னு மனுஷன் போர்ட முடிச்சிடுவாரு. எனக்கெல்லாம் தொடர்ந்து ரெண்டு பாக்கெட் போடவே நாக்கு தள்ளிடும். மனுஷன் கலங்காம நாலு கட்டடிப்பாரு. அவரு விளையாடுவத பாக்கவும், அவங்க செட்டுங்க அடிக்கிற 'கமன்ட்டு' கள கேக்கறதுக்கும் நான் தவறாம ஆஜராகிடுவேன். பட்டபேரெல்லாம் பயங்கரமா வப்பாங்க. எந்த சப்போர்ட்டும் இல்லாம நடுவிரலால ஒருத்தர் கேரம் விளையாடுவார். அவருக்கு "ஒரு விரல் கிரிஷ்ணராவ்" ன்னு பேர் வச்சாங்க. நான் கேரம் போர்ட் விளையாடி கற்றுக்கொண்டதைவிட அவரு விளையாடியதை பார்த்து கற்றுக்கொண்டதுதான் அதிகம்.

சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடியே போயி, கல்யாணம் முடிஞ்சி ரெண்டு மூணு நாலு இருந்துட்டுதான் வருவோம். ராத்திரி முழுக்க கேரம் போர்ட் கச்சேரிதான். என் சித்தப்பா ஒருத்தரு எந்த கல்யாணம் நடந்தாலும் கேரம் போர்ட் tournament ஒன்னு வச்சிடுவாரு. அவரும் நல்லா விளையாடுவாருன்னாலும் அவருக்கு நடுவரா இருக்கறதுல அலாதி. பன்னெண்டு பேரு. ஆறு ஆருன்னு ரெண்டு குருப்பா பிரிச்சி ஆட ஆரம்பிச்சோம். அடிச்சி நகர்த்திட்டு semi-final வந்தாச்சு. 'பஷீர் மாமா'ன்னு ஒருத்தர் நம்ம கூட 'semi' ல. நாப்பது வயசு இருக்கும். நல்லா டெக்னிக்கலா விளையாடுவாரு. இவ்வளவு பெரியவரு கூட விளையாடி ஜெயிக்கனுமா ன்னு கொஞ்சம் நடுக்கம். பரப்பரன்னு ஆட்டம். கல்யாண வீடே சுத்தி நின்னு வேடிக்கை பாக்குது. நான் 28 பாயின்ட். அவரு 23 . red and follow மட்டும்தான் இருக்கு 'போர்ட்'ல. யாரு முடிக்கிறாங்களோ அவங்க final . நான் ரெட் காயின போட்டுட்டேன். follow பாக்கெட்டுக்கு வெகு அருகில். மனுஷன் எழுந்துட்டாரு. எனக்கு "என்னடா இவ்வளவு பெரிய மனுசன 'ஜெயிக்கனுமா' ன்னு தடுமாற்றம். மிஸ் பண்ணிட்டேன். பார்ட்டி அடுத்த 'அட்டம்ப்ட்'ல போர்ட முடிச்சி ஜெயிச்சிட்டாரு. "அவன் வேணுமுன்னே விட்டுக்கொடுத்துட்டான்"ன்னு அவரு சொன்னாலும் எனக்கு என்ன எதுன்னு தெரியாம ஒரு தடுமாற்றம். தோத்துட்டேன்.

வளைகுடா வந்த பின்னும் கேரம் போர்ட் விளையாடுவது நிக்கல. அண்ணன்காரன் ஒரு அருமையான கேரம் போர்ட் வச்சிருந்தான். எனக்கு அது செம க்ளோஸ். நான் சொன்னத கேக்கும். அந்த போர்ட்ல விளையாடுவது எனக்கு கொள்ளை சுகம். வெள்ளிக்கிழமை விடிய விடிய கேரம் போர்ட்தான். அனல் பறக்கும். அண்ணன்காரனும் நானும்தான் எப்போதும் ஒன்னா ஆடுவோம், 'டபுல்ஸ்'ல. எனக்கு சீரியஸா ஆடலைன்னா பயங்கர கோபம் வரும். அண்ணன் தூக்க கலக்கத்துல நல்லா கோட்டை விடுவாரு. செமையா திட்டுவேன். "நான் பாத்து பொறந்தது. ஜட்டி கூட போடாம என் கைய பிடிச்சிகிட்டு சுத்திக்கிட்டு இருந்ததுகிட்டவெல்லாம் திட்டு வாங்க வேண்டியிருக்கு' ன்னு அண்ணன் நக்கலடிப்பார். ஒக்காந்துக்கிட்டே தூங்குவாரு. அப்படி தூங்கிகிட்டே, எங்க தூக்கத்தையெல்லாம் கெடுத்துட்டு ஒரு நாள் போய் சேர்ந்துட்டாரு.

ஆட்டத்துல சேர்த்துகொள்ளாத பசங்க கடுப்பாகி ஒரு லோக்கல் கேரம்போர்ட் வாங்கி வந்துட்டாங்க. என்னோட ரூமில் ஒருபக்கம் நாங்களும் ஒரு பக்கம் சுமாரா விளையாடும் அப்ரசண்டிஸ்களும். நாங்கதான் சீரியஸா சத்தமெல்லாம் போடாமா விளையாடுவோம். அப்ரசண்டிகள் அப்படியில்லாம செம ஜாலியா விடையாடுவானுங்க. பவுடர் கேட்டா கூட நாங்க தரமாட்டோம். ஆனா அதுக்கெல்லாம் அசரமாட்டாங்க. இத்தனைக்கும் அது மோசமான போர்டு. சொள்ள சொள்ளையா இருக்கும். காயின்ஸ் எல்லாம் வெயிட் இல்லாம இருக்கும். ஒருநாள் பயங்கர சிரிப்பு சத்தம். என்னங்கடான்னா ஒன்னும் சொல்லாம சிரிக்கிறானுங்க. அப்புறமா சொன்னானுங்க, "டேய், நீங்க எல்லாம் எத்தன வருஷம் கேரம் விளையாடுறிங்க.நம்ம அண்ணாச்சி இன்னிக்கி ஒரு சாதன செஞ்சிருக்காரு. முடியுமாடா ஒங்களால"ன்னு நக்கல் அடிச்சானுங்க. விஷயம் இதுதான். points விளையாட காயின்ச அடுக்கி ஒருத்தர் ஹிட் அடிச்சிருக்காரு. வெயிட்லெஸ் காயினா இருந்ததுல நடுவுல இருந்த ரெட் காயின் எகிறி நேரா பாக்கெட்ல விழுந்துடுச்சு. எனக்கு தெரிஞ்சி ஹிட் அடிச்சி ரெட் போட்டவரு அவருதான். அந்த விருதை அப்ரசண்டிகளிடமிருந்து எங்களால இன்று வரை வாங்கமுடியவில்லை.

"நல்லாதான் விளையாடுற" என்று எல்லோரும் என்னை சொன்னாலும், முக்கியமான போட்டிகளில் நான் தோற்றே வந்திருக்கிறேன்.

Saturday, February 11, 2012

நீ......

கடுகடுவென இருந்தது உன் முகம்..

முந்தின இரவில் நிகழ்ந்த
முடியுறா முட்டல்களின் விளைவு.

சமாதான உடன்படிக்கை கொணர
சமயமில்லை எனக்கு.

பசையில்லாமலிருந்தது
பல் தூரிகை.

துண்டு வைக்கப்படுமிடம்
துப்புரவாய் இருந்தது

அணியவேண்டிய உடைகளை
அயர்ச்சியுடன் தேடி எடுக்கவேண்டியிருந்தது

அவசரமாய் கிளம்புகையில்
"சாப்பிட்டு போங்க" என
கூப்பிட்டு சொன்னாய்..

பசியிருந்தது..அதைவிட
கோபமிருந்தது.

பணியில் மூழ்கினாலும்
பசி மூழ்கடித்தது.

மதியம் உண்டபின்
மதியில் உன் பிம்பம்.

’சாப்பிட்டிருப்பாளா’ என்ற கேள்வி
சாட்டையாய் சுழன்றது.

மென்மனதை - கோபம்
'வன்'மனதாக்கியது.

நினைவுகளை நகர்த்திவிட்டு
பணிகளில் பிணைகிறேன்.

கதவு திறக்கையில்-உன்
கண் சிவந்திருந்தது.

காலையில் வாடியிருந்த
மலர்முகம் - அந்த
இரவு வேளையில்
இருளடைந்திருந்தது

உடை மாற்றி
'நடை' வந்தேன்
காலை, மேசையில்
வைத்த தோசை
மூலையில்
அப்படியே இருந்தது .

Saturday, January 28, 2012

சட்டை - நினைவுகள்


வளைகுடா வந்தப்பிறகு முதல் தாயக பயணம். விடுமுறையோடு திருமணமும் நிகழ்வதால் களைகட்டியது 'பர்சேசிங்'. திருமணதிற்கென்று ப்ரித்யோகமான உடைகளை வாங்கிக்கொண்டிருந்தோம் நானும் நண்பர்களும். பிளாட்பாரத்தில் சட்டை 5 ரியாலென ஒருவர் கிட்டத்தட்ட நூறு சட்டைகளை போட்டுக்கொண்டு விற்றுக்கொண்டிருந்தார். இரண்டு சட்டை வாங்கும்படி நண்பர் பரிந்துரைத்தார். கொடுக்கும் விலையை பொறுத்தே பொருளின் தரம் இருக்கும் என்பது என் எண்ணம். வேண்டாமென சொன்னேன். " யாராவது இல்லாதவங்களுக்கு கொடுக்கலாம், இரண்டு வாங்கிக்கொள்" என நண்பர் வற்புறுத்தினார். "கொடுப்பதை தரமானதாக கொடுக்கவேண்டும் இல்லாவிடில் கொடுக்காதிருப்பதே சிறந்தது" என மறுத்துரைத்தேன். "பத்து ரியால் கொடுக்க இவ்வளவு பேச்சு ஆவாதுடா மகனே" என நண்பர் இரண்டு சட்டைகளை கொண்டுவந்துவிட்டார்.

ஊருக்கு சென்ற பிறகு இவரிவருக்கு இதிதுவென கொடுத்தபின், இந்த இரண்டு சட்டைகளை யாருக்கும் கொடுக்கவில்லை. சொந்தத்திலொருவர் வீட்டுக்கு வந்திருக்கையில் அவருடையதை கொடுக்கும்போது இந்த சட்டையை கண்டு அதிலிருந்து ஒன்றை எடுத்துக்கொண்டார். நான் வேண்டாமென மறுத்தும் "நல்லாதாண்டா இருக்கு" என்று எடுத்துக்கொண்டார். மீதமொரு சட்டை என் அலமாரியிலேயே இருந்தது.

திருமணம் முடிந்து துணைவி வீடு வந்த பின் பிரிக்கப்படாத அந்த சட்டையை பார்த்து "யாருதுங்க இது, நல்ல சட்டையா இருக்கு " எனக்கேட்டார். அஞ்சு ரியால் சட்டை என பகடி செய்து பதில் சொன்னேன்.

ஒரு நாள் அந்த சட்டையை அணியும்படி மிகவும் வற்புறுத்தினார். நல்லாத்தான் இருக்கு என சான்றிதழ் வேறு. அரைமனதோடு அணிந்துசென்றேன். அருமையான மெல்லிய காட்டன் சட்டை அது. அணிவதற்கு சுகமாகவும் கச்சிதமாகவும் இருந்ததில் எனக்கு வியப்பிலும் வியப்பு. விருப்ப உடைகளில் ஒன்றாக அந்த அஞ்சு ரியால் சட்டை ஆகிப்போனது.

இது நடந்து ஏழாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. என் உயரத்திலும் எடையிலும் அதிக மாற்றமில்லாததால், இன்னமும் அந்த சட்டையை அணிந்துகொண்டுதானிருக்கிறேன். ஒரு நூலிழை கூட பிரியவில்லை. முதலில் போடும்போது இருந்த பொலிவிலும் மாற்றமில்லை.

இந்தமுறை பயணம் போகும்போது மற்றொரு சட்டையை எடுத்துசென்ற சொந்தத்திடம் "எதாவது வேண்டுமா இங்கிருந்து" என வினவுகையில், " நீ கல்யாணத்துக்கு வரும்போது ஒரு சட்டை கொடுத்தியே, அதுமாதிரி ஒன்னு ரெண்டு புடுச்சுக்குனு வாடா. நல்ல சட்டைடா அது " என்றார்.

அந்த அஞ்சு ரியால் சட்டையை எங்கிருந்து தேட..

Saturday, January 7, 2012

கடலூர்- உறைந்த உயிர்கள் - கரைந்த கனவுகள்

ஆனந்த விகடனில் எல்லோரும் "என் ஊர் " என்று எழுதுவதை வாசிக்கையில் நாமும் நம்ம ஊரைப்பற்றி கொஞ்சம் எழுதிப்பார்க்கலாமே என்று அடிக்கடி தோன்றும். யாருமே வாசிக்காத நம் எழுத்தை மெனக்கிட்டு எழுதவேண்டுமா என்கிற சோம்பலில் எழுதுவதே இல்லை.

இன்று எழுதிகிறேன். என் ஆழ்மனதினில் கரைந்து ஒடும் துக்கத்தை பதிந்திட வேண்டுமென எழுதுகிறேன். இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் என் ஊரை பற்றி எழுதுவேன் என கனவு கூட வந்ததில்லை.

கூப்பிடும் தூரத்தினில் கடல். கவிதை எழுதி விளையாட ஆறு. பச்சை வர்ணம் பூசிய வயல் வெளிகள். ஏறி விளையாட ஏரி. நெல், கரும்பு, முந்திரி, மா, பலா, மல்லாக்கொட்டை, கிழங்கு, நொங்கு, தென்னை என இந்த மண்ணில் எதை விதைத்தாலும், பொண்ணாகவே வளம் தரும். எல்லாமே கைக்கெட்டிய தூரத்தினில்.

இயற்கை அள்ளித்தந்த வளங்களை இன்று அதே இயற்கைக்கு காவு கொடுத்துவிட்டு கலங்கி நிற்கிறோம்.

சோறு போட்ட நிலத்தினில் சேறும் சகதியும் மட்டுமே தேறி நிற்கிறது.
குடிசை வீடுகள் என்று ஒன்று இருந்த சுவடே இல்லை.
அறுவடைக்கு காத்திருந்த நெல்வயல்கள் கருக்கலைந்து போயிருக்கிறது.
காலம் காலமாய் குலைதள்ளிய தென்னை, நிலைகுலைந்து காணப்படுகிறது.
பல ஆண்டு பழந்தந்த, பலன்தந்த பலாமரங்கள் நிலம் வீழ்ந்து கிடக்கிறது.
வயலில் வளர்த்த வாழைமரங்கள் வாசலில் வந்து கிடக்கிறது.

எல்லாம் நான்குமணிநேர புயலினால்.


எங்கள் வாழ்கையை நாற்பதாண்டுக்கு பின்னால் இருந்து நாங்கள் துவக்கவேண்டும்.

இன்றுவரை மின்சாரமில்லை. நியாயவிலைக்கு பால்தந்த பண்ணைகள், அநியாயத்துக்கு நிலைக்குலைந்து போய் உள்ளன. துரும்பை கூட தூக்கிப்போடாத அரசாங்கம் கணக்கு மட்டுமே எடுத்துசெல்கிறது. யாரும் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை.எல்லோரும் உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்க யாரை அழைப்பது. குடிசைவாசிகளின் வீடு நடுத்தெருவாகிப்போனது. அள்ளித்தந்த கைகளுக்கு கிள்ளிதரக்கூட யாருமில்லை.

" என் அறுபதாண்டு வாழ்வில் இதுபோன்று ஒரு புயலை சந்திச்சதில்லை.மரம் விழுந்து பார்த்திருக்கிறேன். உடைந்து இப்போதுதான் பார்க்கிறேன். சுனாமி பல உயிர்களை கொன்றுசென்றது. இந்த புயல் பல உயிர்களை மட்டுமே விட்டுவிட்டு எல்லாவற்றையும் கொண்டுசென்றுவிட்டது."

" மரங்களில் பல கிளையில்லாமல்போனது. கிளையுள்ள மரங்களில் இலை இல்லாமல் போனது. காக்கா, குருவிகள் காணாமல் போயிருக்கிறது. "

" வெட்டுக்கு காத்திருந்த கரும்பினில் சோலைகள் இல்லை. அஞ்சு லட்ச கடனில் அம்பது சதவீதம் கூட அடையாது."

" தையில் அறுக்கவேண்டும். வைக்கோல் கூட தேறாது. நெல்லை விதைத்து விட்டு புல்லை அறுக்கவேனும்."

" அண்ணன் தம்பி மாமன் மச்சான்னு பாக்கல. தலைக்கட்டு அறைலிட்டரென அதே விலையில் பால் கொடுத்தேன். 'ஷெட்' எல்லாம் காத்துல போய்டுச்சு. கைய காலப்பிடிச்சி கடன்வாங்கித்தான் பால்பண்ணை வச்சேன். நாலு மணிநேரத்துல நாலு லட்சம் போய்டுச்சு"

" நாளைக்கு நானூறு வரும். கரண்டில்லாம கம்ப்யூட்டர் போடல வருமானம் போதல"

இது நான் அலைபேசியில் அழைக்கையில் சொந்தங்களும், நட்புக்களும் கொட்டியவை. இது போல ஆயரம், லட்சம் கதைகள், அத்தனையும் உன்மைகள்.

தொட்டுவிடும் தூரத்தினில் இருக்கும் பண்ரூட்டியில் அவலம் இன்னும் அதிகம்.

விழுந்த பலாமரங்களில் மகனின் கல்லூரி கனவு வீழ்ந்திருக்கிறது. மகளின் 'மண' கனவு கவிழ்ந்திருக்கிறது. முற்றுபெறாத வீடு நின்றிருக்கிறது.

இன்று வைக்கும் முந்திரி கன்று இன்னும் பத்தாண்டுக்கு பின்னரே பழம்தரும். அதுவரை சோறுக்கு என்னவழி, கரைசேர்க்க காத்திருக்கும் பிள்ளைகளுக்கென்ன வழி.

என்ன செய்ய போகிறது அரசாங்கம். எங்கள் உழைப்பினில் உண்ட உலகம் என்ன தரப்போகிறது எங்களுக்கு. எங்கள் வியர்வையில் பசியாறிய உயிர்கள் என்ன தீர்வு தரப்போகிறது. இறைவனே அறிவான்.