Sunday, September 11, 2011

தகர்க்கப்படும் கனவுகள்


அன்று வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது.

பல்துலக்கி, குளிக்காமல் முகம்கழுவி அவசரமாக தபால் நிலையம் செல்கிறேன்.

"எம்பேருக்கு எதாச்சும் கார்டு வந்திருக்கா"

தபால்காரர் என்னை ஒருமாதிரி பார்த்துவிட்டு, "ஒன்னும் வரல" என்றார். சிறிய கிராமமாதலால் அவருக்கு எல்லாரையும் தெரியும்.
"நல்லா பாருங்கண்ணே"
"வரலடான்னா, திரும்ப திரும்ப கேட்டுகிட்டு."

மனசுக்குள் இருந்த பயம் லேசா விலகிய உணர்வு. காலைகடன்களை கழிக்க நண்பர்களோடு களத்துமேட்டில் கலந்தேன்.

மூச்சிரைக்க பக்கத்து வீட்டு பையன் வந்து தகவல் சொன்னான். என் முகம் கலவரமாக தொடங்கி இருந்தது.

வீட்டு வாசலை அடைந்தவுடன் ஜன்னலில் அம்மா முகம் தெரிகிறது.அதில் அதிதுவென சொல்லமுடியா உணர்ச்சிகள். வயலுக்கு செல்ல ஸ்கூட்டரை படிகளில் பலவை போட்டு இறக்கிக்கொண்டிருந்தார் அப்பா. என்னை பார்த்தவுடன் முன்னமே இருந்த கோபம் இன்னும் கடுமையானது*.

"நல்லதா நாலு எருமை மாடு வாங்கி தருகிறேன். போய் அதயாவது ஒழுங்கா மேய்கிற வழியப்பாரு"

அவர் கண்களை காண தைரியம் இல்லாமல் தலைகுனிகிறேன். கண்ணீர் கசியத்தொடங்கியிருந்தது. காலையில் தபால்காரர் ஒருமாதிரியாக பார்த்தது நினைவுக்கு வந்தது.

ஒன்பதாம் வகுப்பு ரிசல்ட் வந்துவிட்டது .

*அன்று அப்பாவின் கண்களில் தெரிந்தது அவர் கனவுகள் தகர்க்கப்படும் உணர்வாக இன்று விளங்குகிறது.