Tuesday, November 10, 2009

மழை.....


எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது... மழை என்னை மீண்டும் எழுத சொன்னது..

மழை எனும்போதே ஒரு சிலிர்ப்பு வந்து விடுகிறது உடம்புக்கு. சட சடவென மழை பெய்யும் சத்தம் எந்த இசையை விடவும் சிறந்தது.

மழை.. இறைவனின் அத்தாட்சிகளில் ஒன்று.

மழையை ரசிக்க மனிதனுக்கு நேரமில்லாமல் போய்விட்டது. மனிதனின் விரோதப்பட்டியலில் மழையும் ஒன்று.

திரைகடல் ஓடி திரவியம் தேட இந்த பாலைவன பிரதேசத்துக்கு வந்து விட்ட பிறகு மழை எனக்கும்கூட மறந்துபோய்விட்டது. செய்தித்தாள்களில் நம் தேசத்தில் மழை, நம் பிறந்த பூமியில் மழை என்று காணுகையில் உள்ளம் குதூகலிக்கும்.

ஒரு டிசம்பர் மாத விடுப்பில் சொந்த ஊர் சென்றிருந்தேன். ஒரு அதிகாலை வேளையில் மாட்டுப்பண்ணை வைத்திருக்கும் நண்பனை நலம் விசாரிக்க சென்றிருந்தேன். வீட்டை விட்டு கிளம்பும்போதே இருட்டிகொண்டிருந்தது. அவனிடமும் மாடுகளிடமும்! அளவலாவிக்கொண்டிருக்கும்போதே தூறல் தொடங்கியது. அலைபேசியில் மேலும் சில நண்பர்களை அங்கு வர அழைத்தேன். நான்கைந்து தோழர்கள் வந்து சேர்த்த பிறகு தூறல் வேகமானது. மாட்டுப்பண்ணை OFFICE ரூமுக்கு ஒதுங்கினோம். மழை வலுக்க தொடங்கியது. நண்பர்கள் சங்கம் களைய எத்தனித்தது. நான் அவர்களை தடுத்து மழை விட்டவுடன் போகலாமென சொன்னேன். அங்கேயே அமர்தோம்.

விடுமென எண்ணிய மழை மேலும் வலுத்தது. என் காதுகளில் மழையின் சத்தம் அமுதமாய் கேட்டது. அது போல வலுத்த மழையை நான் கண்டு நாள் ஆகிவிட்டிருந்தது. ஒன்பது மணிக்கு துவங்கிய மழை பன்னிரண்டு ஆகியும் விடாமல் பெய்துகொண்டிருந்தது. நண்பர்கள் புலம்ப தொடங்கினர். அவர்களுடைய ஞாயிறு வீனாகிவிட்டதென கரைய தொடங்கிவிட்டிருந்தனர். எனக்கோ இதுபோன்ற மற்றொரு மழையை காணும் வாய்ப்பு கிடைக்காது என தவிப்பு. குடை வேண்டுமென அலைப்பேசியில் அழைப்புகள் பறந்தன.

குடையோடு மேலும் சில நண்பர்கள் வர மணி ஒன்றை தாண்டியிருந்தது. எல்லோருமாக கிளம்ப எத்தனிக்க " இது போன்று ஒரு மழை நாள் எப்போது வருமென" சொல்லி அவர்களை தடுத்தேன். மழையின் சத்தம் காதுகளை தாண்டி மூளையை தொட்டிருந்தது. ஒரு நண்பனிடம் சில நூறுகளை தந்து எல்லோருக்கும் மதிய உணவுக்கு பிரியாணி வாங்கி வர சொன்னேன். நண்பர்கள் வீடு செல்லும் திட்டத்தை சற்றே தள்ளி வைத்தனர்.

அடாது பெய்யும் மழையில் இருவர், மடைதிறந்து ஓடும் மழைநீரில் குடைபிடித்து ஓடினர். பிரியாணி வந்தது. நிச்சயமாய் அப்படி ஒரு பிரியாணியை நான் சாப்பிட்டு நிறைய்ய நாள் ஆகிவிட்டிருந்தது. மழை .. உணவை சுவையாக மாற்றி இருந்தது.

அந்த மழையின் சத்தம் என் காதுகளில் இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
அந்த பிரியாணி இன்னமும் என் நாவினில் சுவைத்துக்கொண்டு இருக்கிறது.
அன்று நண்பர்களோடு அளவளாவியது இன்னமும் என் உள்ளத்தில் பதிவாக இருக்கிறது..

அதனையும் இறைவனின் அருட்கொடையான மழையால் வந்தது..

(ஊரில் நல்ல மழை என்று தொலைபேசியில் அம்மா சொல்லும்போது எழுந்த அடங்கா உணர்வுகளில் எழுதியது)